ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
அந்த அறிக்கையில், “விடுதிகளுக்கு ஆண்டுதோறும் பராமரிப்புச் செலவினமாக ரூ.10.00 கோடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2021-2022 ஆம் ஆண்டு சட்டமன்ற புதிய அறிவிப்புகளின் கீழ் ரூ.25.00 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 366 விடுதிகளில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் சென்னையில் உள்ள 7 கல்லூரி மாணவ / மாணவியர் விடுதிகளிலும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 49 விடுதிகளுக்கு ரூ.85.75 கோடி செலவில் புதிய அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
33 நலத்திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்ட திட்டங்கள் 2021 – 2022 புதிய அறிவிப்புகளாகும். இதில் கடந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் விடுதிகள் தாமதமாக திறக்கப்பட்டதன் காரணமாக காரணமாக இத்திட்டங்களை செயல்படுத்த இடர்பாடுகள் ஏற்பட்டதால் இத்திட்டங்கள் அனைத்தும் இந்நிதியாண்டில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தபடாமல் விடுபடவில்லை. மாறாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் கோவிட் தொற்று காரணமாக இடர்பாடுகள் ஏற்பட்ட திட்டங்களுக்கும் நடப்பாண்டில் முழுமையாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நடப்பாண்டில் புதிய அறிவிப்புகளின் கீழ் 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் புதிய நூலகங்களும், 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் இணைய வழி நூலகங்களும் ரூ.70.00 இலட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன் பெற பெற்றோர் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.50 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கான உதவித் தொகை மற்றும் முழு நேர முனைவர் படிப்பிற்கான உதவித் தொகை ஆகியவற்றிற்கான வருமான உச்ச வரம்பு 2021-2022 ஆம் ஆண்டு முதல் ரூ.8.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கான ஆண்டு வருமான வரம்பினை ரூ.8.00 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு மாநில அரசின் கல்வி உதவித்தொகையாக ஆண்டிற்கு ரூ.8.00 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டிற்கு ரூ.4.50 இலட்சம் இலட்சம் மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனையும் மாநில அரசின் உதவித்தொகை திட்டத்திற்கு இணையாக ஆண்டிற்கு ரூ.8.00 இலட்சமாக உயர்த்திட அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.