நாட்டின் 3வது வந்தே பாரத் எக்பிரஸ் ரயிலை குஜராத்தில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறைக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டின்போது வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சி நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயிலில் காந்திநகரில் இருந்து காலுபூர் வரை பிரதமர் மோடி பயணம் செய்கிறார். இந்த ரயில்களின் கூடுதல் சிறப்பம்சம், இதுவரை பயன்படுத்தப்பட்ட ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 50 டன்கள் எடை குறைவதுடன், குறைவான அளவிலேயே ஆற்றலை உபயோகப்படுத்தும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லோகோ பைலட் எஸ்கே சரீன் கூறுகையில், இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பை சென்ட்ரல் வரை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது 0-100 கிமீ வேகத்தை 52 வினாடிகளில் எட்டிவிடும் என்று கூறினார்.
பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் ரயில் நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதற்கு முன்பு, புதுடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் ரயில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மற்றொரு ரயில் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே 2019-ம் ஆண்டு அக்டோபரிலும் தொடக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.