உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் உள்ள மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் 20 நாட்களாக இப்பணி நடைபெறுகிறது.
இந்த நிலையில், நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானியில் காவல் நிலையம் அருகே மதரஸா ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய குழந்தைகள் மார்க்கக்கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில், அந்த மதரஸா கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி, அதனை நகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களை கண்டதும் சுட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், நகரத்தில் இணைய சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை வரை தொடர்ந்த இந்த கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து ஹல்த்வானி பகுதி ஆட்சியர் கூறியதாவது;
“நீதிமன்ற உத்தரவின்பேரில் முறையாக அனைவருக்கும் கால அவகாசத்துடன் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றங்கள் சென்ற சிலருக்கு தடை உத்தரவும் கிடைத்தது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்றுகிறோம். மதரஸா விவகாரத்தில் திட்டமிட்ட கும்பல், கலவரத்துக்கு காரணமாகி விட்டது. இவர்களில் அடையாளம் தெரியாத 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.








