அமெரிக்க கடற்படை கப்பல் “சால்வர்” பழுதுபார்ப்பிற்காக L&T காட்டுப்பள்ளி கப்பல் தளத்தை அடைந்துள்ளது.
ஜூலை 9, 2023 ஞாயிற்றுக்கிழமை, அன்று மிலிட்டரி சீலிஃப்ட் கமாண்டின் மீட்புப் பணிகள் கப்பல் யுஎஸ்என்எஸ் சால்வர் (டி-ஏஆர்எஸ் 52) பயணப் பழுதுபார்ப்புக்காக, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி ஷிப்யார்ட் என்று அழைக்கப்படும் லார்சன் & டூப்ரோ லிமிடெட் கப்பல் தளத்திற்கு வந்தடைந்தது. யுஎஸ்என்எஸ் சார்லஸ் ட்ரூ மற்றும் யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி ஆகிய கப்பல்களுக்கு பிறகு, பயணப் பழுதுபார்ப்பதற்காக எல்&டி தளத்திற்கு வருகை தரும் மூன்றாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் யுஎஸ்என்எஸ் சால்வர் ஆகும்.
இன்று எல்&டி கப்பல் தளத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் முறைப்படி யுஎஸ்என்எஸ் சால்வர் வரவேற்கப்பட்டது. அமெரிக்க கடற்படை மற்றும் எல்&டி இடையே ஐந்தாண்டு கப்பல் பழுதுபார்க்கும் சிறப்பு ஒப்பந்தம் (MSRA) கையெழுத்தான பிறகு வந்த முதல் கப்பல் இதுவாகும்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின், புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத் தலைவர் கேப்டன் மைக்கேல் எல். ஃபார்மர், எல்&டி டிஃபென்ஸ் வர்த்தகப் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைவர் ஏ.டி. ராம்சந்தனி, அமெரிக்க தூதரகம் மற்றும் எல் அண்ட் டி நிறுவன மூத்த அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறியதாவது: “தொடர்ந்து விரிவடைந்து வரும் அமெரிக்கா-இந்தியா கூட்டுறவில் மற்றொரு மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் திகழ்கிறது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க-இந்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமைந்துள்ளது. காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தின் பழுதுபார்க்கும் வசதிகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது. நமது இரு நாடுகளின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதிக்கு பங்களிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.” என தெரிவித்தார்.
ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் சிறப்பான பங்காற்றியதற்காகவும், மூன்றாவது கப்பலில் கடற்பயண பழுதுபார்ப்பை மேற்கொள்வதற்காகவும் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்திற்கு புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத் தலைவர் கேப்டன் மைக்கேல் எல். ஃபார்மர் பாராட்டு தெரிவித்தார்.
யுஎஸ்என்எஸ் சால்வர் கப்பலை பற்றிய தகவல்கள் :
கப்பலின் முழு பெயர் : மிலிட்டரி சீலிஃப்ட் கமாண்டின் (MSC) மீட்புப் பணிகள் கப்பல் யுஎஸ்என்எஸ் சால்வர் (டி-ஏஆர்எஸ் 52)
கப்பலின் பணி : கடலில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு உதவ இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
என்ன வகையான உதவிகள்..: மீட்பு, இழுத்து செல்லுதல், கடலோர தீயணைப்பு, கனரகப் பொருட்களை தூக்குதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிகளை சால்வர் மேற்கொள்கிறது.
கப்பலின் உரிமை மற்றும் செயல்பாடு :
அமெரிக்க அரசுக்கு சொந்தமான யுஎஸ்என்எஸ் சால்வர் எம்எஸ்சி வசம் உள்ள இரண்டு மீட்புப் பணிக் கப்பல்களில் ஒன்றாகும் மற்றும் தூர கிழக்குப் பகுதியில் உள்ள இவ்வகையிலான ஒரே கப்பலாகும்.
யுஎஸ்என்எஸ் சால்வர் பற்றி சுவாரசியமான தகவல்கள் :
யுஎஸ்என்எஸ் சால்வோரின் கட்டுமானம், அதன் வேகம் மற்றும் உறுதித்தன்மை, உலகம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகவும் ஏற்றதாக இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் காம்பாட் லாஜிஸ்டிக்ஸ் ஆதரவுப் படையின் ஒரு அங்கமாக இது செயல்பட்டு, கடலில் உள்ள கடற்படைக்கு மீட்பு சேவைகளை வழங்குகிறது.
கப்பல் விபரங்கள் :
நீளம்: 255 அடி
அகலம்: 51 அடி
எடை: 3,336 டன்
வேகம்: 14 நாட்ஸ்
பணியாளர்கள்: 26
பாதுகாப்பு படையினர்: 4
கூடுதல் 48 (அதிகபட்சம்)







