திமுக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவ்வாறு திமுக ஒதுக்காவிட்டால், அனைத்துத் தொகுதிகளிலும் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று ரவி பச்சமுத்து கூறினார்.
இந்திய ஜனநாயகக் கட்சி, ஒரு குடும்பத்திற்காக நடத்தப்படும் கட்சி அல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சி, குடும்ப அரசியல் செய்வதாக நிரூபித்தால், தேர்தல் அரசியலை விட்டே தான் விலக்கத் தயார் என்று பாரிவேந்தர் குறிப்பிட்டார்.







