தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாகவும் அவரை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கண்டிக்க வேண்டும் என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தூக்கிய போர்க்கொடியால் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி அரசு ஆட்டம் கண்டுள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களை சேர்த்து மொத்தம் 46 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கூறுகிறார். தற்போது அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அவர், அங்கிருந்தபடியே மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். விரைவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தனது பலத்தை சட்டப்பேரவையில் நிச்சயம் நிரூபிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள அதிருப்தி எம்.ஏல்.ஏக்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய சஞ்சய் ராவத், தேவைப்பட்டால் அந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக வீதியில் இறங்கி சிவசேனா தொண்டர்கள் போராடுவார்கள் என்றும் எச்சரித்தார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை திரும்பியதும் நிலைமை மாறும் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்ரே வெற்றி பெறுவார் என்றும் சஞ்சய் ராவத் கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைர் சரத் பவாரை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாகக் கூறிய சஞ்சய் ராவத், மகாராஷ்டிர மண்ணின் மைந்தனான சரத்பவாரை மிரட்டும் அந்த மத்திய அமைச்சரை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகாராஷ்டிராவைச்சேர்ந்த மத்திய அமைச்சரான நாராயண ரானே நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை மும்பைக்கு வரச்சொல்லி சரத்பவார் மிரட்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார். “அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நிச்சயம் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வருவார்கள், தங்கள் விருப்பப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பாளர்கள், ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஆனால்… வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது” என்றும் நாராயண ரானே பதிவிட்டிருந்தார். அவரது இந்த டிவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.