விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர், டிரக் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவின் புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாற்று எரிபொருளுக்கான அவசியமும், எலக்டரிக் வாகனங்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து தான் பேசியபோது, மக்கள் அதுபற்றி தன்னிடம் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டார். ஆனால், தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப் பெரிய தேவை வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். எலக்ட்ரிக் வாகனங்களுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை தற்போது உருவாகிவிட்டதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையை அடுத்து, தற்போது எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் பேருந்து ஆகியவையும் வந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர், டிரக் ஆகியவற்றையும் தான் அறிமுகப்படுத்த இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
எத்தனால் கலந்த பெட்ரோலில் ஓடும் என்ஜின்களை பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் தயாரித்திருப்பதாகக் குறிப்பிட்ட நிதின் கட்கரி, முழுமையாக எத்தனாலால் இயங்கக் கூடிய என்ஜினையும் உருவாக்க முடியும் என கூறினார்.
இத்தகைய வாகனங்கள் சந்தைக்கு வருமானால் அதனால் புகை இருக்காது என்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்றும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.








