பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்தவித மின் தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது மின் தடை அவ்வப்போது ஏற்படுவதால், சமூக வலைத்தளங்களில் அதற்கான மீம்ஸ்சுகளும் அதிகரித்து விட்டன. மின் தடை இல்லா தமிழ்நாடு என்று அரசு கூறிவரும் நிலையில், கடந்த ஆட்சியில் இல்லாத வகையில் மின்தடை ஏற்படுவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அந்த வகையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாட்டில் எந்தவித மின் தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டப்பேரவையில், எம்எல்ஏ மணிக்கண்ணன் கேள்விக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்தவித மின் தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களும், மே மாதத்தில் 6 நாட்களும் உச்சபட்ச மின் தேவை 16,000 மெகாவாட்டாக உயர்ந்த போதிலும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதாக விளக்கமளித்தார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு, தடையில்லா சான்று வழங்கப்பட்டால் தான், மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் மின் இணைப்பு இல்லாத வீடுகள் பற்றிய விவரங்களைத் தந்தால், வருவாய்த்துறையுடன் பேசி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.