மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர்,
செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி
இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது
துரதிஷ்டவசமானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவியின் உயிரிழப்பு குறிப்பில் இருந்து கூட, ஆசிரியர்கள் அவரை உயிரிழப்புக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். அதனால் மாணவியை உயிரிழப்புக்குத் தூண்டியதாக மனுதாரர்களுக்கு
எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார். படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி உயிரிழப்பு கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் நான்கு வாரங்களுக்கு சேலத்தில்
தங்கி இருந்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின் நான்கு வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன்
ஆகியோர் நான்கு வாரங்களுக்கு மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல்
நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட
வேண்டும். அதன் பின் நான்கு வாரங்களுக்கு சிடிசிஐடி போலீசார் முன் தினமும் காலை,
மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், விசாரணைக்கு அழைக்கும் போது போலீசார் முன் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
-ம.பவித்ரா