இங்கிலாந்தில் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்நாட்டு உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டார். அங்கு ஆளும் கட்சி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கும், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டபோது, லிஸ் டிரஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக்கை விட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்தில், அந்நாட்டு உள்துறை அமைச்சராக உள்ள பிரித்தி படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தார்.
இது தொடர்பாக போரிஸ் ஜான்சனுக்கு அனுப்பியுள்ள தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, பிரித்தி படேல் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், நம்முடைய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ்ஸை வாழ்த்துகிறேன். மேலும் நம்முடைய புதிய பிரதமரான அவருக்கு எனது ஆதரவை வழங்குவேன்.
லிஸ் டிரஸ் முறைப்படி பதவி ஏற்றதும், புதிய உள்துறை மந்திரி நியமிக்கப்பட்டதும், பின்வரிசையில் இருந்து நாட்டிற்கும், தொகுதிக்கும் எனது பொதுச் சேவையைத் தொடர்வது எனது விருப்பம் என்று அந்த கடிதத்தில் பிரித்தி படேல் கூறியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்








