நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட உதய்ப்பூர் தையல்கடைகாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மா, இஸ்லாமியர்களின் இறை தூதர் முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ராஜஸ்தானின் உதய்ப்பூரைச் சேர்ந்த தையல்கடைகாரர் கன்ஹையா லால் சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக கொலை செய்யப்பட்டார்.
கொலை வழக்கில் தொடர்புடைய ரியாஸ், கவுஸ் முகம்மது, மோசின், ஆசிப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய சிறப்பு புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் அனைவரையும் 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தபோது, அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றவாளிகள் 4 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
எனினும், குற்றவாளிகளை அழைத்து வந்த போலீசார், மிகுந்த சிரமத்திற்கு இடையே அவர்களை போலீஸ் வேனில் ஏற்றினர்.
இந்த சம்பவம் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.







