ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 14ம் தேதி வரை 70ஆயிரம் பேர் வெளியேற அமெரிக்கா உதவியதாக குறிப்பிட்டார். மேலும் அந்நாட்டிலிருந்து 75 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வேறுபகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜி 7 கூட்டமைப்பு தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை தங்களின் அணுகுமுறைக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறினார்.
தலிபான்கள் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்திற்கு ஒத்துழைப்பு அளித்தால், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறிவிடும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்திக்கொள்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், அங்குள்ள நிலைமை, குறிப்பாக பெண்களின் முன்னேற்றம் குறித்து மிகுந்த கவலைகொள்வதாக உலக வங்கியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.







