இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  2013ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவருக்கு 90 சதவிகித மாற்றுத்திறன்  ஏற்பட்டது. தனக்கு கூடுதல் இழப்பீடு கோரி…

இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2013ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவருக்கு 90 சதவிகித மாற்றுத்திறன்  ஏற்பட்டது. தனக்கு கூடுதல் இழப்பீடு கோரி பல் மருத்துவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பல் மருத்துவருக்கு வழங்கப்பட்ட  18,43,908 இழப்பீட்டை ₹ 1,49,80,548 ஆக உயர்த்தி தர உத்தரவிட்டனர். மேலும், இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்  எனவும், இதுதொடர்பாக இரு சக்கர உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்ந்து, “விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம், வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தினர்.

பள்ளிப் பாடத்திட்டங்களில் சாலை விதிகளையும் சேர்த்து கற்றுக்கொடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய  நீதிபதிகள், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 2 தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.