இறுதி கட்டத்தை எட்டியுள்ள #TVK முதல் மாநாட்டு பணிகள்?

வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய், 2026ஆம் ஆண்டு…

வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என தெரிவித்துள்ளவர், தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார், தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்ததையடுத்து கட்சியின் பாடலையும் வெளியிட்டுள்ளார். விஜய்யின் அடுத்தடுத்த அதிரடியாக தமிழக அரசியல் கட்சிகள் ஷாக்கில் உள்ளது.

இந்தநிலையில் அரசியலில் நுழைந்தள்ள விஜய் இதுவரை நேரடியாக அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல்  மாநாடு வருகிற 23 தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாட்டை திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.  

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக விழுப்புரம் ஏ.எஸ். பி.யிடம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு ஒன்று அளித்தார். இதனையடுத்து மாநாடு மேடை அமைக்கப்படவுள்ள இடத்தை காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 40 ஏக்கர் நிலப்பரப்பும், பைக் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு  5 ஏக்கர் நிலப்பரப்பு,பொதுமக்களுக்கு எந்த இடர்பாடுகளும் இல்லாமல் பார்க்கிங் ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வர வாய்ப்பு இருப்பதால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாநாட்டிற்காக நான்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவது  மற்றும் மாநாடு முடிந்த பிறகு பாதுகாப்பான முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துள்ள தவெக மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை திட்டங்களை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.