திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலை, மனதிற்குள் பெருமாளை வழிபடுவதாகவே தாம் கருதுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
வரும் 15ந்தேதி அமமுக பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த பொதுக் குழு குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னாற்ற கழக தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி அதிமுக பொதுக் குழுவை நடத்திய இடம் என்பதாலேயே ஸ்ரீவாரு திருமண மண்டபத்தை தாம் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுமக்களை பாதிக்காத வகையிலேயே ஜிஎஸ்டி வரி இருக்க வேண்டும் என்று கூறிய டிடிவி தினகரன், இந்த விஷயத்தில் தங்களின் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது என்றார். ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்யாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்று கூறிய டிடிவி தினகரன், எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை குறைத்து அவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டதாகவே தாம் கருதுவதாகக் கூறிய டிடிவி தினகரன், இந்த விழாவில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிறப்பாக நடந்து கொண்டதாகக் தெரிவித்தார். சிறந்த எழுத்தாளரான கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் தவறு இல்லை என்று கூறிய டிடிவி தினகரன், ஆனால் அதனை அரசு செலவில் வைக்காமல், திமுக செலவில் அமைக்கலாம் என கருத்து தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பெரியார் கடவுளுக்கு எதிரி அல்ல என்றும், கடவுள் பெயரைக் கூறி ஏமாற்றுபவர்களுக்கே எதிரி என்றும் கூறினார். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை தவிர மற்ற அனைத்துக் கொள்கைகளிலும் தங்களுக்கு உடன்பாடு உள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன், ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை பார்க்கும்போது, அந்த சிலை மனதிற்குள் பெருமாளை வழிபடுவது போன்றே தமக்கு தோன்றும் எனத் தெரிவித்தார்.