பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன சாகச பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார். அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன் காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று விழுந்தததில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார். மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் காஞ்சிபுரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இனியா, யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்.3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து விபத்து ஏற்பட்டதில் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மற்றும் தனது உடல்நலக்குறைவு என்ற காரணத்தை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஜாமின் மனு இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, ஜாமீன் வழங்க நீதிபதி செம்மல் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







