’டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்’ – வெள்ளை மாளிகை!

உலகமெங்கும் நிகழ்ந்த 6 போரை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்துள்ளது.

உலகின் முகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று அமைதிக்கான நோபல் பரிசு ஆகும். சுவீடன் நாட்டைச் சேர்ந்த மறைந்த விஞ்ஞானியும் கொடையாளியுமான ஆல்ஃப்ரெட் நோபல் என்பவரின் பெயரில் உருவாக்கப்பட்ட ஆறு விருதுகளில் இதுவும் ஒன்று. நார்வே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரைக் கொண்ட குழுவினரால், இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அபோது பேசிய அவர்,உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார். மேலும், “டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். அதனால்தான் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

லெவிட் பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்தியதாகவும்  பேசியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.