முதல்முறையாக விமானத்தில் பறந்த கோவை பழங்குடியின மக்கள் ஈஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தைச் சுற்றியுள்ள தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையில் இருந்து சென்னைக்கு விமான பயணம் செய்தனர். இவர்கள் இண்டிகோ விமானத்தில் காலை 11:30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 12 :45க்கு சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை விமானப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2017ல் திறக்கப்பட்ட ஆதியோகி சிலை அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் வருகை அதிகரித்ததால் உணவு கடைகளுக்கான தேவை அதிகரித்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடி மக்கள், ஈஷா அவுட்ரீச் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பிரம்மச்சாரிகளின் உதவியோடு கடைகள் நடத்த தொடங்கினர். இந்த கடைகள் மூலமாக அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்தனர். இந்த கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டே இந்த விமானப் பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
விமானப் பயணம் குறித்து வெள்ளாச்சியம்மா கூறுகையில், “இதுவரை தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் தான் விமானத்தை பார்த்திருக்கோம். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது” என்றார். மடக்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர் ஈஷா யோக மையத்திற்கு அருகே உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் இளநீர் விற்பனை செய்கிறார்.
மடக்காடு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி கூறுகையில், “என் மனைவிக்கு விமானத்தில பறக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதனால் திருப்பதிக்குப் போக நாங்க தயார் பண்ணிட்டு இருந்தோம், அப்பதான் ஈஷா அவுட்ரீச்சில் இருந்து ஒரு சுவாமி சென்னைக்கு போரத பத்தி சொன்னாங்க. நான் தினமும் அதப்பத்தி கேட்டுட்டே இருப்பேன். என் மனைவி ஆசை நிறைவேறிடிச்சுனு எனக்கு சந்தோஷமா இருக்கு” என்றார் .
முள்ளாங்காட்டை சேர்ந்த சூரியகுமார் கூறுகையில், “இது வெறும் ஆரம்பம் தான். ஆதியோகிக்கு வருகின்ற மக்கள் கூட்டம் அதிகமாகும். அதனால் அடுத்த வருஷம் இன்னும் 100 பேர் விமானத்தில் போவோம். இது எங்க எல்லாருடைய ஆசை” என்றார்.
முதல்முறையாக விமான பயணம் செய்யும் இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்திருந்தது. விமானத்தில் ஏறியதும் விமானி இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். மேலும், பயணத்தின் பொழுது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.
-ம.பவித்ரா








