திருவண்ணாமலை – இந்த பெயரை கேட்டால் உங்கள் நினைவில் என்ன தோன்றும்? அதுவொரு மலை, மாபெரும் பசுமையை வெளிக்காட்டிக் கொண்டு தன்னுள் அமைதியை ஒளித்து வைத்திருக்கும் மலை. திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார் தானே, உலகப் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் இருக்கும் அக்னிஸ்தலம். இப்படி பல்வேறு சிறப்புகளை வைத்துக்கொண்டு அமைதியாய் இருக்கும் இந்த திருவண்ணாமலையில், பல்வேறு பழைய விஷயங்கள் பலருக்குப் புதிதாய் இருக்கலாம். ஆம், அதில் ஒன்றுதான் பவழக்குன்று.
பல பொக்கிஷங்களை ஒளித்து வைத்திருக்கும் இவ்வூரில், மலையின் அருகே, சிவன் கோயிலின் அருகே, அமைதியாய் காட்சியளிக்கும் சிறியதொரு மலைக்குன்றுதான் பவழக்குன்று. இந்த குன்று இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்ல, திருவண்ணாமலைக்கு ரயில் மார்க்கமாகவோ அல்லது பேருந்து மார்க்கமாகவோ செல்ல வேண்டும்…
எங்கிருந்து பார்த்தாலும் கோயில் கோபுரத்தின் உச்சியை காணலாம். பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையில் சிறிது தூரம் சென்றால், சின்னக்கடை எனும் தெரு ஒன்று வரும். இந்த தெருவில் நடக்கும்போது வலதுபுறமாக திருவண்ணாமலை தெரியும், அதேபுறம் தான் பவழக்குன்றும் அமைந்துள்ளது. ஏறக்குறைய 200 படிகட்டுகளை கடந்தால் எளிதில் அடைந்துவிடலாம் பவழக்குன்றின் உச்சியை.
இந்த பவழக்குன்றுவின் மேலிருந்து பார்த்தால், அண்ணாமலையார் கோயிலின் முழு அமைப்பும் நம்மை அசரவைப்பதோடு, அழகாகவும் காட்சியளிக்கும். அழகாய் காட்சியளிக்கும் பவழக்கிரீஷ்வரர், அர்த்தநாதீஷ்வரர் மற்றும் முத்தாம்பிகையும் இக்கோயிலின் மூலஸ்தனத்தில் உள்ளனர். இந்த இடத்தில் தான் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த கோயிலின் உட்புறத்தில் ரமண மகரிஷி தியானம் செய்த இடம் உண்டு. இதே இடத்தில் பல மகான்களும், ரிஷிகளும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அருமையான இடத்திற்கு நீங்கள் சென்றால் பேரமைதியை ருசிக்கும் ஓர் அரிய வாய்ப்பினை பெறுவீர்கள் என்பது உண்மை.
மேலும் இந்த இடத்தை பற்றிய ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க புராணக்கதையும் உண்டு; சிவபெருமான் தனது உடலிலும் சக்தியிலும் பாதியாகச் சக்தியைச் சேர்த்துக் கொண்டார் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது நிகழ்ந்த இடம் இந்த பவழக்குன்று தான் என்பது ஐதீகம்.
அன்னை பார்வதி ஒருமுறை சிவனின் கண்களைச் சட்டென்று அவரது கைகளால் மூட, உலகமே இருண்டு போனது. அந்த இருளிலிருந்து உலகைக் காக்க, அவர் காஞ்சிபுரம் சென்று தவம் இருந்ததாகவும், அதற்கு சிவபெருமான் திருவண்ணாமலையில் உள்ள இந்த இடத்தில் சென்று தவம் மேற்கொள்ள கூறியதாக நம்பப்படுகிறது. அவர் கூறிய இடம் தான் இந்த பவழக்குன்றுதான்.

அதன்பின் பார்வதி அன்னை பவழக்குன்றில் வந்து தவம் இருந்ததாகவும், கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையின் உச்சியில் ஓர் தீப ஒளியாகத் தோன்றி, இறைவன் சிவபெருமான் அவருக்கு அருள்பாலித்து தன்னுடைய இடப்புறத்தை பார்வதிக்கு அளித்ததாகவும் புராணக்கதை உண்டு.
இப்படிப்பட்ட நிகழ்வுகளால் ஜொலிக்கும் இடத்திற்கு, நீங்கள் இதுவரை செல்லவில்லை எனில் நிச்சயம் சென்று வாருங்கள். உங்கள் உள்ளம் பவழக்குன்றில் கொள்ளை போகலாம்!








