அமெரிக்காவில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது, மேடையில் ஏறிய மாணவி ஒருவர் சந்தோஷத்தில் நடனமாடியதால் அவருக்கான டிப்ளமோ சான்றிதழ் வழங்க பள்ளி முதல்வர் மறுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள பிலேடெல்பியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் விழாவில் கலந்துக் கொள்வதற்காக அங்கு வந்திருந்த போது பட்டமளிப்பு விழா நடைபெறும் சமயத்தில் எந்த கூச்சலோ, சத்தமோ இருக்கக் கூடாது என பள்ளி நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏன் குறைந்தபட்சம் தங்கள் குழந்தைகள் பட்டம் பெறும் போது கூட பெற்றோர் கைதட்ட வேண்டாம் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் பட்டமளிப்பு விழா அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், ஹஃப்ஸா அப்துல் ரஹ்மான் என்ற மாணவியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, மேடைக்கு வந்த அந்த மாணவி தான் பட்டம் பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியை அடக்க முடியாமல் தன் பெற்றோரை நோக்கி கை அசைத்து முத்தமிட்டதோடு, லேசான உடல் அசைவை கொடுத்த பின் பள்ளி முதல்வரிடம் சான்றிதழ் பெற அருகில் சென்றார். ஆனால் அப்போது முதல்வரோ, பட்டம் கொடுக்கமால் அருகில் இருந்த கூடையில் சான்றிதழை தூக்கி போட்டதோடு, சொன்ன வார்த்தையை மீறியதால் மேடையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதனால் மேடையை விட்டு மிகவும் சோகமாக இறங்கிய ஹஃப்ஸா அப்துல் ரஹ்மான், தனக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்காதது குறித்து மிகவும் வருத்தப்பட்டதோடு, தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், தான் படித்ததது எனக்காக மட்டும் இல்லமால் 2014 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன தனது சகோதரிக்காகவும் தான் நான் படித்தேன். இப்போது பட்டம் பெறவும் வந்தேன். முதல்வரின் இந்த செயலால் எல்லாம் வீணாய் போனது என அந்த மாணவி வருந்தினாள்.
அதேபோல் ஹஃப்ஸா அப்துல் ரஹ்மானின் தாயும் இது குறித்து பேசும்போது ” நான்கு வருட உயர்நிலைப்பள்ளிக்கு மாணவி கோவிட் காரணமாக வரமுடியாமல், மனரீதியாக, உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அப்படியிருக்க தங்களை தாங்களே உத்வேகப்படுத்திக்கொள்ள என் மகள் செய்த சிறிய தவறுக்கு, அவளது நான்கு
ஆண்டு படிப்பையே வீணடிப்பது மனிதாபிமானம் அற்ற செயல்” என கூறி வருந்தியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா










