கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் நாளை முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் மட்டும்தான் இயங்கவேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நாளை முதல் தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 % ஊழியர்களுடன் இயங்கவேண்டும். அலுவலகங்களில் சமூக இடைவெளி, கொரோனா பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கவேண்டும்.
வீட்டில் இருந்து பணிப்புரியும் ஊழியர்கள் அனுமதியின்றி வெளி மாவட்டத்திற்கு செல்லகூடாது. அலுவலக வேலைக்காக தேவையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும்.
ஆனால் குரூப் ‘ஏ’ பிரிவில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களுக்கு பணிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர திட்டமிடவேண்டும். சுழற்சி முறையில் வரும் ஊழியர்கள் ஒரு நாள்விட்டு ஒரு நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வரும் வகையில் திட்டமிட வேண்டும்.
மேலும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியார்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவர்கள் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.







