கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் காலதாமதமும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை கருத்தில்கொண்டு, தானியங்கி ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி பெறும் முறையை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவுசெய்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.இதனால் மே 1ஆம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தாலே போதும், நேரில் வரத் தேவையில்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.