திருப்பூர் நகை அடகுக்கடை கொள்ளை விவகாரத்தில் தொடர்புடைய 4 பேரை மகாராஷ்டிராவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை மற்றும் அடகுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 15 வருடங்களாக நகைக்கடையின் பின்புறத்தில் வசித்து வந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடியேறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 3ம் தேதி வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், கடையில் இருந்த 375 சவரன் நகைகள், 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தவர்கள் என தெரியவந்தது. மேலும் திருப்பூரில் இருந்து கொள்ளையடித்த நகை மற்றும் ரொக்கப்பணத்துடன், ரயில் மூலம் மகாராஷ்டிராவிற்கு கொள்ளையர்கள் தப்பி சென்றது சிசிடிவியில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவிற்கு விரைந்த தனிப்படை போலீசார், நாக்பூர் அருகே பதுங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 3 கிலோ தங்கம், 14 லட்சம் ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.