தூத்துக்குடியில் நிறைய தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து நிறைய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் நாம் அனைவருடைய கனவாக இருக்கின்றது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். மேலும் தூத்துக்குடியில் விரைவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அகில இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் 40-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பங்கேற்றார்.
கனிமொழி எம்.பி சிறந்த தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த தொழில் நிறுவனங்கள், சிறந்த பெண் தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த நிறுவனங்கள் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு திரையரங்கு உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.
மேலும், சங்கத்தின் 40- வது ஆண்டின் கல்வெட்டை திறந்து வைத்து விழாவில் சிறப்புரையாற்றி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பேசுகையில், “ஒரு நிறுவனத்தினை 40-ஆண்டுகள் நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு
உறுதுணையாக இருந்தவர்களுக்கு முதலில் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு காலகட்டத்தில் சாதரணமாக இருந்த தூத்துக்குடியை நகரமாக மாற்றி நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு கொண்டு வந்திருப்பது நம் முன்னோர்கள், முன்னோடிகள்தான்.
சென்னையில் மட்டுமே எல்லா தொழில் நிறுவனங்களும் வரக் கூடாது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்லா தொழில் நிறுவனங்களும் வர வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களில் தொழில் நிறுவங்களை கொண்டு வரும் நோக்கில் ஆசியாவிலேயே முதன் முதன்முறையாக பர்னிச்சர் பார்க்கினை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்காக அடிக்கல் நாட்டி உள்ளார்.
அதேபோல் விரைவில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தூத்துக்குடியில் நிறைய தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து நிறைய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் நாம் அனைவருடைய கனவாக இருக்கின்றது என்றார் கனிமொழி எம்.பி.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்
பாலாஜி சரவணன் மேயர் ஜெகன் மற்றும் அகில இந்திய வர்த்தக தொழில் சங்க
நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில்
நிறுவத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.








