திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது மேவாட் கொள்ளையர்கள்- போலீசார் தகவல்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது மேவாட் கொள்ளையர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன் தினம் இரவு மர்ம…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது மேவாட் கொள்ளையர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியாஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 4 ஏடிஎம் மையங்களிலும் மொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கொள்ளையர்கள் தங்கள் கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எறித்துச் சென்றுள்ளனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருவண்ணாமலை நகர் காவல் நிலைய போலீசார், போளூர் நகர காவல் நிலைய போலீசார், கலசபாக்கம் காவல் நிலைய போலீசார் ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள்  இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் வழியாக ஆந்திரா செல்லும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதே போல ஆந்திரா , கர்நாடகா மாநில எல்லைகளிலும் போலீசார் நேற்று நள்ளிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையில் ஹரியானாவைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதை விசாரணையில் கண்டறிந்த தமிழ்நாடு காவல்துறை, குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஹரியானா இன்று காலை விரைந்தது. ஹரியானா மாநிலம் நூக், மேவாட், பால்வால் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு காவல்துறை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும்  தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்த நிலையில்  ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை கும்பல் கண்டெய்னர் லாரிகளில் திருடப்பட்ட கார்களுடன் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றுள்ளது. இதனால் கொள்ளையர்கள் வாகனம் குறித்து ஆந்திரா தெலங்கானா எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆந்திராவில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம் ஒன்று கேஸ் வெல்டிங் வைத்து 24 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. அந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது மேவாட் கொள்ளையர்கள்தான். ஆந்திராவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக இருவரை ஆந்திரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து ஜாமினில் வெளி வந்த நபர்களும் அவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வங்கி மேலாளர் போல் பேசி நூதனமாக கொள்ளையடிப்பது, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, லோன், போலி முகநூல் கணக்கு மூலம் தகவல்களை திருடி மிரட்டி பணம் பறிப்பது போன்ற சைபர் குற்றங்களில் ஹரியானா மாநிலம் மேவாட் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.