டெல்லி பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காலண்டரில் திருவள்ளுவர் பற்றி ஒருபக்கம் இடம்பெற்றுள்ளது.
இந்திய அளவில் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம் சுதந்திரத்திற்கு முன்பு 1922ல் துவங்கப்பட்டது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதற்கு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் துணை வேந்தராக செயல்படுகிறார்.
இப்பல்கலைகழகத்தில் பட்டம் பயின்ற மாணவர்கள் உலக அளவில் பலதுறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் பஞ்சாங்க நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இது தினசரி நாட்காட்டியாக இல்லாமல் மாதங்களை கொண்ட நாட்காட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏப்ரல் மாதத்தில் திருவள்ளுவர் உருவப் படமும் திருக்குறளின் கல்வி அதிகாரம் குறித்த கருத்துகளும் வெளியாகி உள்ளன. இந்த நாட்காட்டியை டெல்லிப் பல்கலைக்கழக இந்தித் துறையின் தலைவர் பேராசிரியர் நிரஞ்சன் உருவாக்கியுள்ளார். நாட்காட்டி வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) மாலை டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
டெல்லி பல்கலைகழகத்தின் தமிழ் பேராசிரியரான உமாதேவி தமிழ் மொழி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழக்கம் உடையவர். இவர் பல்கலை கழகத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு திருக்குறளை அறிமுகம் செய்துள்ளார். மேலும் இவரின் முயற்சியால் வட இந்திய மாணவர்கள் சென்னை வருகை புரிந்து தமிழ் குறித்த ஆய்வுகள் மற்றும் தமிழ் இலக்கியங்கள் குறித்து கற்று சென்றது குறிப்பிடடத்தக்கது.







