மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை தொடர்ந்து தினமும் அபிராமி,சமேத அமிர்தகடேஸ்வர்க்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் திருவிழாவின் 8 ஆம் நாளான நேற்று கோயிலின் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் பஞ்ச மூர்த்திகளுடன் அமிர்தகடேஸ்வரர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.தருமபுரம் ஆதினம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
—–கோ. சிவசங்கரன்







