திமுகவில் யார் தும்மினாலும், அதை விமர்சனம் செய்ய இன்று பலர் காத்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “1999 ஆம் ஆண்டு நாசர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு நடத்தி வைத்தேன். அவர் மகன் திருமணத்தையும் கலந்து கொண்டு நடத்தி வைத்தேன். காலம் எவள்ளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை இந்த திருமணம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். நேற்று தான் அமைச்சர் நாசரை இளைஞராக பார்த்த ஞாபகம். நாசர் சுலபமாக அமைச்சராக வந்துவிடவில்லை.
பாசறை கூட்டத்தை முதன் முதலில் இளைஞர் அணி சார்பில் நான் செயலாளராக இருந்த
போது, ஆவடியில் நாசர் முன்நின்று நடத்தினார். அந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக கொடியை அதிகம் ஏற்றிய பெருமை கலைஞருக்கு தான் உண்டு. அதற்கு அடுத்த இடம் அவர் மகனான எனக்கு தான்.
அப்போது என்னோடு நாசர் வருவார். துணைக்கு வரும் நாசர் அதிகம் தூங்கி கொண்டு வருவார். பொதுவாக தூக்கம் வரவில்லை என்றால்தான் மாத்திரை போடுவார்கள். ஆனால் நாசர் தூக்கம் வராமல் இருக்க மாத்திரை போடுவார். அப்படி இருந்தும் தூங்குவார். இப்போது, அவருடன் சென்ற காலங்களை நினைத்து பார்க்கிறேன்.
ஒரு பொறுப்பை கொடுத்தால் அதை சிறப்பாக செய்வார். அவர் எதைச் செய்தாலும் அது பிரமாண்டமாக இருக்கும். திருமண தேதி கொடுத்தவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் ஆடம்பரமாக திருமணத்தை செய்து விடுவாரே. அதன் மூலம் ஏதாவது விமர்சனம் வந்துவிடுமோ என்ற நினைத்தேன். நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பரவாயில்லை. ஆனால் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நாசர் பெயருக்கு ஏதாவது இழுக்கு வந்துவிட்டால் எனக்கு மட்டுமல்ல. திமுகவிற்கே அவப்பெயர் வந்துவிடும்.விமர்சனம் செய்ய இன்று பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கு என்ன தப்பு நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தும்மினால் போதும், அதை கண்டுபிடித்து செல்போனில் படம் எடுத்து வெளியிடுகின்றனர். அந்த அளவுக்கு சமூக ஊடகங்கள் பரவி உள்ளது.நான் அவரை கூப்பிட்டு கல்யாணம் எளிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதுபோலவே அவர் செய்துள்ளார். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
அமைச்சராக நாசர் வந்த உடனே பால் விலை குறைந்தது, இதன் மூலம் 4 லட்சத்து 20 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைந்து உள்ளனர். அதிமுக ஆட்சியில் தீபாவளியின் பொழுது 55 கோடிக்கு தான் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 85 கோடி ரூபாய்க்கு ஆவினில் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆட்சியை விட தற்போது பால் பொருட்களின் விற்பனை அதிகமாகி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின் என்று சொல்வதை விட, நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்வது தான் ஸ்டாலினுக்கு பெருமை. அது வரக் காரணம் அமைச்சர்கள் தான்” என்று தெரிவித்தார்.