கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்
கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர்
கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை
ரத்து செய்யக்கோரி மதி முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத்
அமர்வு, “கோயில் ஒரு வழிபாட்டுத் தலமாகும். கோயில் என்பது அனைத்து
பக்தர்களுக்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் கோயிலில்
வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின்
அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது. இது இந்திய அரசியலமைப்புச்
சட்டத்திற்கு எதிரானது.
இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்தே விழா கொண்டாடுமாறு தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
கோயில் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தலமாகும். கடவுள்
நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என்று நீதிபதிகள் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.





