ஓராண்டாக எங்கே சென்றீர்கள்? – ஜி.கே.மணியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

பொன்னாகரம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி ஏதும் செய்து தரவில்லை எனக் கூறி பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாட்டாளி…

பொன்னாகரம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி ஏதும் செய்து தரவில்லை எனக் கூறி பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத்  தலைவர் ஜி.கே.மணி.  இவர் கடந்த ஓராண்டாக தொகுதி பக்கமே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் ஜி.கே.மணி இன்று பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட சென்றார்.

அப்போது அப்பகுதி மக்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர். குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் சிரமம்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் ஜி.கே.மணியிடம் புகார் கூறினர்.  மேலும், “கடந்த ஓராண்டாக எங்கே சென்றீர்கள்?” என பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால், எம்எல்ஏ ஜி.கே.மணி அப்பகுதியில் இருந்து சென்று விட்டார்.  மேலும், எம்எல்ஏ உடன் வந்தவர்கள், “பார்த்த இடத்தில் எல்லாம் கேள்வி கேட்பீர்களா?” என பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.