சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து தீரன் சின்னமலையின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கொங்கு நாடு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன், சமூக நீதியை பாதுகாத்தவர் தீரன் சின்னமலை எனப் புகழாரம் சூட்டினார். மேலும், தீரன் சின்னமலையின் வரலாறு பாடப்புத்தகங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதேபோல், சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் நினைவு சின்னத்தில் தீரன் சின்னமலையின் உருவ படத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.










