அமெரிக்க அரசு எனக்கு அளித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின கொண்டாட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றார். பின்னர், வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2வது நாளான இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் டைபன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமரா, ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் மோடிக்கு ஜில் பைடன் பரிசாக வழங்கினார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இணைந்து வழங்கிய அரசு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ”அமெரிக்க அரசு எனக்கு அளித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரமாகும். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அமெரிக்கா இந்தியாவின் உறவின் உண்மையான பலம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தான்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். உலகம் முழுவதும் வலிமையை மேம்படுத்தும் வகையில் அமெரிக்கா-இந்தியா நட்புறவு இருக்கும். இருநாடுகளுக்கான உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளோம்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.







