கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு : ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 7000 கன அடியாக உயர்வு!

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 7000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக…

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 7000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பை கருதி கடந்த இரு நாட்களுக்கு முன்பு காவிரியில் நீர் திறக்கப்பட்டது.

இந்த நீர் நேற்று மாலை தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தது. காலை 2500 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 4000 கன அடியாக உயர்ந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கன
அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படுவதால் ஒகேனக்கலுக்கு கூடுதல் நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஒகேனக்கல் .ஊட்டமலை காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.