வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமையாக நடத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பெண்ணை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துராமன்,
விவசாயக் கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு அன்னக்கிளி என்கிற மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்
இளந்தென்றல் என்கிற துரை பக்கீர்சாமியின் “ஸ்ரீ ஹரிணி” என்ற தனியார்
வெளிநாட்டு ஏஜென்சி உள்ளது.
இந்த நிறுவனம் மூலம் துபாய் நாட்டில் வீட்டு வேலைக்காக மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியதையடுத்து தனது மனைவி அன்னக்கிளியை கடந்த மாதம்
15 ஆம் தேதி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் “துபாய்” நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி “மஸ்கட்டிற்கு” அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து ஏஜென்டிடம் கேட்டபோது ஒரு மாத காலத்திற்குப் பிறகு மஸ்கட் நாட்டிலிருந்து துபாய் அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அன்னக்கிளியைத் தொடர்ந்து இருபது மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குவதாகவும், ஓய்வு எடுத்தால் அடித்துச் சித்திரவதை செய்வதாகவும் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர் மனைவி, செல்போன் மற்றும் பாஸ்போர்ட்டை பிடுங்கியதால், நேற்று இரவு 9 மணிக்குப் பிறகு அன்னக்கிளியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இது குறித்து ஏஜென்டிடம் கேட்டபோதும் உடனடியாக திரும்ப அழைக்க முடியாது. இப்போது ஊருக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் அவர் இறந்தாலும் அங்கே தான் இறக்க வேண்டும் என மிரட்டும் பாணியில் பேசி உள்ளார். எனவே அன்னக்கிளியைப் பத்திரமாக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என முத்துராமன் மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்களை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெ.வீரம்மாதேவி
வெளிநாட்டில் கொத்தடிமையாகத் தவிக்கும் பெண்;மீட்கக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.