பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி, உணவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இன்று முதல் டோக்கன் வழங்கக் கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஜனவரி 9ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கும் பொருட்கள் 60 விழுக்காடு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் 100 சதவீத பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும்.
கடந்தாண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக புகார் வந்தது அதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 19,269 நபர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஒரு கரும்பின் விலை 33 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12ம் தேதிக்குள் பொங்கள் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்களுக்கும்
வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ம் தேதியும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.