அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை குஜராத் முதலமைச்சர் புபேந்திர பட்டேல், ஆளுநர் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு போரிஸ் ஜான்சன் சென்றார். அங்கு ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், அங்குள்ள ராட்டினத்தில் நூல் நூற்றார். இதைத்தொடர்ந்து ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டார். அகமதாபாத்தில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார்.
இன்று மாலை டெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். மேலும் இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாடுகள் இடையே தடையில்லாத வர்த்தக உடன்படிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.