ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக்கலீபா இன்று காலமானதையடுத்து, இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்த ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலமானர். அவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும் உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிஃப்பாவின் மறைவுக்கு இந்தியாவில் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.