அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20 ஆம் தேதி புதிய அதிபராக பைடன் பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி வேட்பாளர் ட்ரம்பை விட 70க்கும் அதிகமான தேர்தல் குழு வாக்களர்களை பெற்று எதிர்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபைடன் வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ அதிபர் தேர்தல் வெற்றியை அறிவிக்கும் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவரும் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் இன்று தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
இதனை அடுத்து நடைபெற்ற தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கையில் 306 வாக்குகளை பெற்று ஜோ பைடன் புதிய அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை துணை அதிபர் மைக் பென்ஸ் வழங்கினார். இதன் மூலம் வரும் 20 ஆம் தேதி ஜோ பைடன் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். இதனிடையே தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள அதிபர் ட்ரம்ப் வரும் 20 ஆம் தேதி அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.




