“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள நிலையில், இத்திரைப்படம் குறித்து மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலத்துக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்புவதாக, ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவில் அந்த திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் நாடு முழுவதும் வெளியாக உள்ளது. திரைப்படத்தை கேரளாவில் வெளியிடக்கூடாது என்றும், திரையிடுவதற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராடி வருகின்றன.
இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ள நிலையில் வெளியிடக்கூடாது என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாடு உளவுத்துறைக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில், தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை வெளியிட்டால் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதை போல், தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை திரையிடாமல் தவிர்ப்பது நல்லது என மாநில அரசுக்கு உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தை வெளியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்து தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
- பி.ஜேம்ஸ் லிசா