உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் விவகாரம்-பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள்…

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று (24-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக  பிரதமர் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளிப்பதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

எந்தவொரு இந்திய மருத்துவ நிறுவனம் அல்லது பல்கலைகழகத்திலும் எந்தவொரு வெளிநாட்டு மருத்துவ மாணவர்களையும் இடமாற்றம் செய்ய தேசிய மருத்துவ ஆணையத்தால் (NMC) எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை”. மாநிலத்தில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் குறிப்பிட்ட சூழலில் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், இது மாணவர்களின் நிச்சயமற்ற எதிர்காலத்தை மீண்டும் ஒருமுறை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது என்பதை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.

ரஷ்யா தாக்குதல் நடத்தியதிலிருந்து, உக்ரைனில் இருந்து சுமார் 2000 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இது நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஒன்றாகும். உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உடனடியாக உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கலாம்.

போர் நிறுத்தப்பட்ட பின்னரும் நிச்சயமற்ற தன்மை நிலவும். இதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்களை இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளில் உள்ள பொருத்தமான பல்கலைக்கழகங்களிலோ தங்க வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.