சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்!

சென்னையிலிருந்து சுவிட்சர்லாந்து செல்லவிருந்த பயணியிடமிருந்து அதிகாரிகள் ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபி நோக்கி செல்லும் எத்தியார்டு ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து கொண்டிருந்தனர்.

அப்போது, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்டீன் ரங்கேல் (70) என்பவர் ஜிபிஎஸ் கருவி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, பயணி ஜிபிஎஸ் கருவியை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

இதனையடுத்து, அவரிடன் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்தது தெரியவந்தது. அவர் அபுதாபி வழியாக சுவிட்சர்லாந்து திரும்புவதற்காக இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் “டெல்லி உட்பட எந்த விமான நிலையத்திலும் இதை தடுக்கவில்லை. எங்கள் நாட்டில் விமானங்களில் ஜிபிஎஸ் கருவிகள் எடுத்து செல்வதற்கு தடையும் இல்லை” என கூறியதாக தெரிகிறது.  ஆனால் அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு அதிகாரிகள் மார்டீனின் பயணத்தை ரத்து செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.