எட்டையபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரைப் பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முகத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (வயது 20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்க ராஜ் (வயது 26) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ரேஷ்மாவின் தந்தை முகத்துக்குட்டி இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘கணியாமூர் கலவரம்; தகவல் தராத டெலிகிராம்?’
இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்குள் வந்துள்ளனர். அப்போது, இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முகத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். ஆனாலும், மகள் மீது இருந்த ஆத்திரத்தில் ரேஷ்மா மற்றும் அவரது கணவர் மாணிக்க ராஜ் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்குச் சென்ற முகத்துக்குட்டி இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக எட்டையபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய முகத்துக்குட்டியைத் தேடி வந்தனர். இந்நிலையில், பெற்றோரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.








