தமிழ்நாட்டில் உயர் கல்வியின் அடித்தளம் சிறப்பாக உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 11 இடங்களைப் பிடித்த சென்னை IIT, அம்ரிதா விஸ்வ வித்யாபீடம், கோவை, வேலூர் VIT, திருச்சி NIT, வேலூர் CMC, மாநிலக் கல்லூரி, சென்னை, லயோலா கல்லூரி, சென்னை, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை, சவீதா மருத்துவக் கல்லூரி & தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை, SRM அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை, JSS பார்மசி கல்லூரி, உதகமண்டலம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். இதன் மூலம் தமிழ்நாட்டின் பெயரை வெளியில் கொண்டு வந்துள்ளீர்கள். முதல் 20 இடங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம். அவர்களுக்கும் வாழ்த்துகள். தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. தரவரிசையில் இடம்பிடித்தவை , இடம்பிடிக்காதவை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். தரத்தை மேம்படுத்த வேண்டும்.தரவரிசையில் முதலிடம் பிடித்தால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
மிகச்சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் சிறந்த அடையாளம், பெருமையைப் பெற்றுள்ளது சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும். சிறந்த கருத்துரு, யோசனைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்மூலம் ஒன்றிணைந்த வளர்ச்சியைப் பெற முடியும். தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பல நல்ல விஷயங்கள் மேலோங்கியுள்ளன. அவற்றை பின்பற்றலாம். தனியாருடன் இணைந்து செயல்பட அரசு முன்வர வேண்டும்.
-ம.பவித்ரா








