கோரக்பூர் ஐஐடியில் பட்டம் பெற்று அதிக அளவிலான ஊதியத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய குழந்தையுடன் நேரம் செலவிடுதற்காக, வேலையை ராஜினாமா செய்த நிகழ்வு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத் தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. பல லட்சங்களை சம்பளமாக பெற்று வந்தார். பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்திருக்கிறார்.
இது தொடர்பான தகவல் தற்போது யுமன்ஸ் ஆப் பாம்பே என்ற தளத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிய வந்திருக்கிறது. அன்கிட் ஜோஷி, ஆகான்ஷா தம்பதிக்கு சமீபத்தில் ஸ்பிதி என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்தது. ஸ்பிதியை கவனித்துக்கொள்ள ஆகான்ஷா மெட்டர்னிட்டி விடுமுறையில் இருந்தாலும், தானும் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணி வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் அன்கிட்.
இது குறித்து அன்கிட் ஜோஷி கூறுகையில், சில நாட்களுக்கு முன்புதான் என் மகள் பிறந்தாள். அதிகளவு சம்பளம் பெறும் என்னுடைய வேலையை விட்டேன். இது கஷ்டமான முடிவு தான். பலரும் மிகப்பெரிய கஷ்டமான நாட்களை கொடுக்கும் என தெரியுமா என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் என் மனைவி ஆகான்ஷா என் பக்கம் இருப்பதே எனக்கு போதும்.
ஹிமாச்சலில் உள்ள ஸ்பிதி வேல்லிக்கு சுற்றுலா சென்றிருந்தபோதே எங்கள் மகளுக்கு ஸ்பிதி என பெயரிட முடிவெடுத்திருந்தோம். அதன்படியே எங்கள் கனவும் நிறைவேறியது. ஸ்பிதி பிறந்த பிறகு எங்கள் வாழ்க்கையே மன நிறைவை பெற்றது போல இருக்கிறது. ஆனால் என் மகள் பிறப்பதற்கு முன்பே, என் பேட்டர்னிட்டி விடுப்பை தாண்டி அவளுடன் என் நாட்களை கழிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.
ஆனால் வெவ்வேறு நகரங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் என் வேலையை விரும்பியே செய்தேன். ஆனால், ஸ்பிதி பிறந்த பிறகு அவளுடன் நேரம் செலவிட நீண்டநாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நான் வேலை பார்க்கும் நிறுவனம் அதற்கு அனுமதிக்காது என தெரியும். குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாக தந்தைகளுக்கு உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மூத்த துணைத் தலைவராக இருந்த தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்ல மகளை பார்த்துக் கொள்கிறார் ஐ.ஐ.டி. கரக்பூர் பட்டதாரி.








