“வலுவான அடித்தளத்தை அமைத்த காமராஜர் புகழ், என்றும் நிலைத்திருக்கும்” – அண்ணாமலை!

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த காமராஜர் புகழ், என்றும் நிலைத்திருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று.
‘கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.

பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.