பிரபல ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது தனது உடல்நிலை பற்றி வெளிவந்த செய்திகள் வதந்தி என்பதை வீடியோ மூலம் உறுதி செய்துள்ளார்.
இலங்கை வானொலியில் பணியாற்றி வந்தவர் அப்துல் ஹமீது. இவரின் குரலும், தெளிவான தமிழ் பேச்சும் அவரை மிகவும் பிரபலமாக்கியது. வானொலியில் பிரபலமானதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை அப்துல் ஹமீது தொகுத்து வழங்கினார். புகழ்பெற்ற தொகுப்பாளராக வலம் வந்த அப்துல் ஹமீது இலங்கையில் வசித்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே அவர் உடல்நல குறைவால், காலமானதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று நேற்று பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும் அந்த தகவல் வெறும் வதந்தி தான் என்றும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில், தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு பின் கண்ணீருடன் விளக்கம் கொடுத்து அப்துல் ஹமீது வீடியோ இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “மாண்டவன் மீண்டும் வந்து பேசுகிறானே என சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார்கள். சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுததை கேட்டு, என்னால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்தாளோ என் அன்னை என்று நினைத்துக் கொண்டேன்.
நேற்று இலங்கை பத்திரிகையில், மரணம் மனிதனுக்கு கிடைத்த வரம் என்கிற கட்டுரையை நான் எழுதி இருந்தேன். அப்படி ஒரு அனுபவம் தான் எனக்கு கிடைத்துள்ளது. செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம். முதல் அனுபவம் 1983-ம் ஆண்டு, இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு எரித்துவிட்டார்கள் என்கிற வதந்தி பரவியது.
அதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன் யூடியூப்பில் ஒருவர் என்னுடைய பெயரை போட்டு நான் இறந்து விட்டதாக பதிவு செய்திருந்தார். தற்போது மூன்றாவது முறையும் என்னைப் பற்றிய மரண செய்தி வந்திருக்கிறது. 3 முறை உயிர் பிழைத்திருக்கிறேனா என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது” என அப்துல் ஹமீது பேசி உள்ளார். இந்த காணொலியில் பேசிக்கொண்டிருக்கும் போது அப்துல் ஹமீது உடைந்து அழுவதை காண முடிகிறது.
View this post on Instagram