மக்கள் நீதி மய்யத்திற்கு கோவை மக்களிடம் அதிகளவு ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 15ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று அமைச்சர் ஜெயகுமார், திமுக தலைவர் ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன், அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக அளவில் ஆதரவு இருக்கிறது. மேலும், மநீமவின் தொகுதிவாரியான தேர்தல் அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும். மாற்றத்திற்கான வேட்பாளராக நான் இருப்பேன் என்று கூறினார்







