மத்தியப் பிரதேசத்தில் சரக்கு வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனத்தை தீயிட்டு எரித்ததோடு, அதன் ஓட்டுநரை தீயில் தள்ளி கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் சிராசிங் என்ற ஊர் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் வாகனங்கள் வேகமாக செல்வதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு பயணிகளை இறக்கி விட்டு, சரக்கு வாகனம் ஒன்று சென்றது. அப்போது, சிராசிங் பகுதியில் சென்ற அந்த வாகனம் 6 வயது சிறுமி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சிறுமியை மோதிய வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து அடித்து நொறுக்கினர். பின்னர் வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். இதை பார்த்த வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு, அவரை வாகனத்தில் எரியும் தீயில் தள்ளி விட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீக்காயங்களுடன் இருந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







