’அரசுப் பணியாளர் தேர்வாணைய கட்டமைப்பு சீரமைக்கப்படும்’

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த நிதி & மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியுள்ளது எனக் கூறினார். இதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த குழுவுடன் முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த குழு 6 மாதத்தில் பரிந்துரைகளை தரவும் திட்டமிட்டுள்ளதாகவும், நிதி முக்கியத்துவம் என்றாலும், மனிதவளமும் முக்கியம் என்று கருதி முதலமைச்சர் செயல்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்தார். எனவே இந்த ஆய்வு முடியும் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படும் என அவர் கூறினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.