பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார் என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம், பொங்கல் பரிசு விநியோகம் உள்ளிட்டவை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. துறை ரீதியாக நடைபெறும் கூட்டத்தில் கூட்டுறவுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “ஊரக வளர்ச்சித்துறை பொறுப்பை முதலமைச்சரின் எண்ணப்படி சிறப்பாக வழிநடத்தியிருக்கிறேன். அமைச்சரவை விரிவாக்கத்தில் துறை மாற்றப்பட்டு கூட்டுறவுத்துறை அமைச்சராக வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது தலைமையில் முதல் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. கூட்டுறவு வங்கிகள் லாபகரமாக இயங்கி வருகின்றது.
கூட்டுறவின் தாயகம் தமிழ்நாடு தான். பண்டக சாலைகளில் தரமான பொருட்கள், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக விற்பனையாகிறது. 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ள தமிழ்நாட்டில், 75% மக்கள் கூட்டுறவுத் துறையுடன் இணைந்துள்ளனர்.
பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். பொங்கல் பரிசுத்தொகை குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட பின், ஜனவரி 2 ஆம் தேதி முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு முதன்முதலாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இடையில் 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் வழங்கப்படவில்லை. பொங்கலும் வந்தது, சென்றது. இந்த ஆண்டு எதையும் செய்யவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.